ஷா ஆலம், ஜன 15- சிலாங்கூரில் உள்ள ஐந்து நீர்த் தேக்கங்களில் நீரின் கொள்ளளவு உச்ச வரம்பை எட்டியதால் உபரி நீர் அணையிலிருந்து வழிந்தோடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
நீர்த் தேக்கங்களில் 100 விழுக்காடு நீர் நிரம்பியுள்ள நிலையில் மிகுதியாக உள்ள நீரின் வெளியேற்றம் கட்டுப்பாட்டில் உள்ளதாக லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக வாரியம் கூறியது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு மழை பெய்யாவிட்டாலும் மாநிலம் முழுமைக்குமான தேவையை ஈடுசெய்யும் அளவுக்கு நீர் கையிருப்பு போதுமான அளவு உள்ளது என அது தெரிவித்தது.
அனைத்து ஐந்து நீர்த் தேக்கங்களிலும் நீர் முழுமையாக நிரம்பி உபரி நீர் வழிதோடி வருகிறது. உபரி நீரின் வெளியேற்றம் கட்டுப்பாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
உலு சிலாங்கூரின் சுங்கை திங்கி அணை, பெட்டாலிங் மாவட்டத்தின் தாசேக் சுபாங் அணை, உலு சிலாங்கூரின் சுங்கை சிலாங்கூர் அணை, உலு லங்காட்டின் சுங்கை லங்காட் அணை, உலு லங்காட்டின் செமினி அணை ஆகியவற்றில் நீர் அளவு தொடர்பான விளக்கப்படத்தையும் அது பகிர்ந்து கொண்டுள்ளது.