ஷா ஆலம், ஜன 17- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதி தொடங்கி அனுமதி வழங்கப்படும்.
தற்போதைய நிலவரப்படி மாநிலத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் மலையேறும் நடவடிக்கைகளுக்கு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் சுற்றுச் சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.
வரும் 31 ஆம் தேதியுடன் இத்தடை முடிவுக்கு வரவுள்ள நிலையில் பிப்ரவரி முதல் தேதி தொடங்கி மலையேறும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.
மாநிலத்தில் வானிலை சீரடைந்து வரும் நிலையில் மலையேறும் நடவடிக்கைகளுக்கு எப்போது அனுமதி வழங்கப்படும் என்று விளையாட்டு மற்றும் வீரதீர நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்களும் பங்கேற்பாளர்களும் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை மலையேறும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்படுவதாக மாநில வளத்துறை கடந்தாண்டு நவம்பர் மாதம் கூறியிருந்தது.