கோலாலம்பூர் ஜன 20 ;- கடந்த ஆண்டு இறுதியில் சிலாங்கூர் மற்றும் நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதை தொடந்து, அப்போது நாடாளுமன்ற எதிர் கட்சித்தலைவர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அன்றையதினமே வெள்ள நிலையை விவாதிக்க நாடாளுமன்ற அவையில் நேரம் ஒதுக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது அப்போது நிராகரிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் அன்றைய கோரிக்கைக்கு ஏற்ப இன்று ஜனவரி 20 ன்று நாள் குறிக்கப்பட்டது. நாடாளுமன்ற சிறப்பு அமர்வின் வழி, வெள்ளம் குறித்த உரையில் சில இடங்களில் பிரதமரின் தடுமாற்றம், முரன்பட்ட குறிப்பிடுகள், பிரதமர் மக்களை குழப்பி, அரசியல் ஆதாயம் தேட முனைந்துள்ளதை காட்டுவதாக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாடினர்.
சிலாங்கூரிலும் மற்ற மாநிலங்களிலும் ஏற்பட்ட வெள்ளத்திற்கு அவர் அதிகமான மழை பெய்தலை காரணமாக கூறி, வானிலை ஆய்வுத் துறையின் எச்சரிக்கையை சில மாநில அரசுகள் பொருட்படுத்தவில்லை என்றார்.
சிலாங்கூர் மாநில அரசு தயார் நிலையில் இல்லை என மறைமுகமாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசின் கைவசமிருந்த வெள்ளத்தை எதிர்கொள்ள தேவையான சாதனங்கள் மற்றும் சொத்துகள் மற்ற மாநிலங்களுக்கு அதிகபடியாக வினியோகிக்கப்பட்டு விட்டது என்ற அவர் உரை சிலாங்கூரில் வெள்ளத்தை எதிர்கொள்ள மத்திய அரசும் தயார் நிலையில் இல்லை என்பதையே காட்டுகிறது.
பிரதமர், டிசம்பர் 18ந் தேதி வெள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு தனது வருகையை குறிப்பிட தவறவில்லை. ஆனால், மக்களின் கேள்வி, எது முக்கியம், வெள்ளம் ஏற்பட்ட இடங்களில் அரசாங்க துறைகளின் உடனடி நடவடிக்கையா அல்லது பிரதமர் வருகையா?
உதவி வேண்டி அவசர அழைப்பு விடுத்தவர் வீடுகளுக்கு மீட்பு குழு உடனே செல்ல முடியவில்லை, காரணம் சாலை அடையாளங்கள் நீரில் மூழ்கி விட்டன, என்பதும் ஒரு நொண்டி சாக்கு என்கிறார்கள் பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்கள்.
தங்கள் வீட்டின் கூரை மீது நின்று கொண்டு உதவி கோரியும், உதவிக்கு வராத அரசாங்க மீட்பு குழுவின் போக்கு குறித்து பிரதமர் என்ன சொல்லப்போகிறார் என்று பதில் கேள்வி தொடுத்தனர் பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்கள்.