கோலாலம்பூர், ஜன 20 - நாடு முழுவதும் மொத்தம் 122,202 போலீஸ்காரர்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று தேசிய போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்தார். அவர்களில் 32,652 பேருக்கு கடந்த ஜனவரி 18ஆம் தேதி வரை பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார். காவல் துறையினர் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயத்திலிருந்து இந்த தடுப்பூசி பாதுகாப்பளிக்கும் என்று நம்புகிறோம் என்று அவர் கூறினார். தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் காவல் துறை பணியாளர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிர்வாகத் துறையினருக்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார். இன்று, புக்கிட் அமானில் நடைபெற்ற ஐ.ஜி.பி.யின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வையொட்டி போலீஸ் படையின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.