சுபாங், ஜன 22- சிலாங்கூர் அரசின் “டாட்டா இண்டநெட்“ திட்டத்தின் கீழ், பி.டி.ஆர்.எஸ். எனப்படும் சிலாங்கூர் டியூஷன் ராக்யாட் திட்டத்தில் பங்கேற்றுள்ள 9,000 மாணவர்கள் இலவச இணைய தரவு சேவையைப் பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் கீழ் 7,000 மாணவர்களுக்கு உதவி வழங்க ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில் மேலும் 2,000 மாணவர்கள் அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டதாக எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகத்தின் நிறுவன சமூக கடப்பாட்டு பிரவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.
அனைத்து மாணவர்களும் இணைய சேவைக்கான சிம் கார்டுகளைப் பெற்று விட்டனர். எனினும் அவர்களில் சிலர் அதனை இன்னும் பயன்படுத்தாமலிருக்கின்றனர். அம்மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை அடையாளம் காணும் முயற்சியில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து ஈடுபடவுள்ளோம் என்றார் அவர்.
கம்போங் தெங்கா பூச்சோங்கில் அகமது மற்றும் முகமது ரோஸ்லி என்ற இரட்டையர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பன்னிரண்டு மாதங்களுக்கு இலவச இணைய சேவையை வழங்கக்கூடிய இலவச சிம் கார்டுகள் மாணவர்கள், வணிகர்கள், விவசாயிகள், தனித்து வாழும் தாய்மார்கள் உள்ளிட்ட 70,000 பேருக்கு வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிடின் ஷாரி கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் கூறியிருந்தார்.