ஷா ஆலம், ஜன 23- சிலாங்கூர் அரசின் 1,000 வெள்ளி வெள்ள உதவி நிதக்கு 70,000 விண்ணப்பங்களை மாநில அரசு பெற்றுள்ளது. இதில் சுமார் 41,000 பேருக்கு நிதி வழங்கப்பட்டு விட்டது.
அடுத்த கட்டமாக வெள்ளத்தின் போது தற்காலிக நிவாரண மையங்களில் தங்காதவர்களுக்கு நிதியுதவி வழங்கும் பணி தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பழுதடைந்த வீடுகளைச் சரி செய்வதற்கும் வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்டவர்களின் மனுக்களை பரிசீலிக்கும் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் 30,000 பேர் வரை மட்டும் உதவி பெறுவர் என தொடக்கத்தில் கணிக்கப்பட்டதாக கூறிய அவர் இருந்த போதிலும் விண்ணப்பம் செய்தவர்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கான நிதி ஆற்றலை மாநில அரசு கொண்டிருப்பதாக சொன்னார்.
இத்திட்டத்திற்கான பதிவு நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்க நிதி இதில் சம்பந்தப்பட்டுள்ளதால் அனைத்து விண்ணப்பங்களும் உரிய அங்கீகாரத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார் அவர்.
மத்திய அரசின் 1,000 வெள்ளி உதவித் தொகையைப் பெறுவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் அதே பாரத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் 18 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியதவி அளிப்பதற்காக பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் மாநில அரசு 10 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.