ஷா ஆலம், ஜன 25- வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் ஐந்து இடங்களில் கார் நிறுத்தக் கட்டண முறையை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் அமல் செய்யவுள்ளது.
பாசீர் பெனாம்பாங், ஈகோ கிராண்டியர், ஈஜோக், கோல சிலாங்கூர் மற்றும் சுங்கை பூலோவில் இந்த கட்டண முறை அமல் செய்யப்படுவதாக நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.
கார் நிறுத்துமிடங்கள் தவறான நோக்கத்திற்கு பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்கும் நகரத் திட்டமிடலை சீராக மேற்கொள்வதற்கும் ஏதுவாக இந்த கார் நிறுத்தக் கட்டண முறை அமல் செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஐந்து இடங்களிலும் மணிக்கு 50 காசு கார் நிறுத்தக் கட்டணமாக வசூலிக்கப்படும். சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் நீங்கலாக திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படும்.
இணையம் வாயிலாக ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் முறையிலும் பிளக்ஸி பார்க்கிங் அல்லது நியமிக்கப்பட்ட முகவர்களின் வாயிலாக மாதாந்திர கூப்பன்கள் மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம்.