ECONOMYHEADERADNATIONAL

கழிவுநீர் கால்வாய்களில் வெளியேற்றம்- பானத் தயாரிப்பு தொழிற்சாலைக்கு வெ. 76,000 அபராதம்

ஷா ஆலம், ஜன 26- நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான தொழிற்சாலை கழிவுநீரை பொது கால்வாய்களில் வெளியேற்றிய குற்றத்திற்காக இங்கு செயல்பட்டு வரும் பானத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றுக்கு 76,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

அந்நிறுவனத்தின் இயக்குநர் குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து ஷா ஆலம் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ராஸ்ஷியா கசாலி இந்த தீர்ப்பை வழங்கினார்.

அத்தொழிற்சாலை கடந்த 2020 டிசம்பர் 31 ஆம் தேதி இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் 16(1) பிரிவு மற்றும் 2009 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தர விதிகளின் 10(3) வது பிரிவின் கீழ் அத்தொழிற்சாலைக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமான ஆக்சிஜன் இரசாயனம் மற்றும் அடர்த்தியான திடப் பொருள் கழிவை அந்நிறுவனம் வெளியேற்றியதாக சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் துறையின் இயக்குநர் நோர் அஜியா ஜாபர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

தொழிலியல் கழிவு சுத்திகரிப்பு பணிக்கு திறன் பெற்ற பணியாளர்களை அமர்த்தாதது தொடர்பிலும் அந்நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :