கோம்பாக், ஜன 28- வரும் 2030 ஆம் ஆண்டுவாக்கில் மாநகர் அந்தஸ்து பெற முடியும் என்று செலாயாங் நகராண்மைக் கழகம் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்த ஊராட்சி மன்றத்தை உயர்ந்த இடத்தில் வைக்க தாங்கள் இலக்கு கொண்டுள்ளதாக நகராண்மைக் கழகத் தலைவர் முகமது யாஸிட் சைடி கூறினார்.
கடந்த இருபது ஆண்டுகளாக பல சவால்களை எதிர்கொண்ட செலாயாங் நகராண்மைக் கழகம் இன்று பல மாற்றங்களைக் கண்டு முதிர்ச்சியும் சுபிட்சமும் நிறைந்த ஊராட்சி மையமாக உருமாற்றம் கண்டுள்ளது என்றார் அவர்.
செலாயாங் பகுதி மக்களுக்கு நிறைவான சேவையை வழங்குவதில் அர்ப்பண உணர்வுடன் பணியாற்றும் நகராண்மைக் கழகப் பணியாளர்களுக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
செலாயாங் மக்களின் எதிர்பார்ப்பு உயர்ந்த பட்சத்தில் உள்ளதால் அவர்கள் திறன்மிகுந்த மற்றும் ஆக்ககரமான சேவையை எதிர் பார்க்கின்றனர் என்றார் அவர். நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட்டால் சிறப்பான, பாதுகாப்பான மற்றும் தூய்மையான பகுதியாக செலாயாங்கை உருவாக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.