காஜாங், ஜன 31- பெரானாங் வட்டாரத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட் 91 குடும்பங்களுக்கு எம்.பி.ஐ. எனப்படும் சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் 27,300 வெள்ளி நிதியதவி வழங்கியது.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 300 வெள்ளி வழங்கப்பட்டதாக எம்.பி.ஐ. தலைமை செயல்முறை அதிகாரி நோரித்தா முகமது சீடேக் கூறினார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 22 ஆம் தேதி ஏற்பட்ட வெள்ளத்தில் இவ்வட்டாரத்தைச் சேர்ந்த ஒன்பது கிராமங்கள் பாதிக்கப்பட்டன. இந்த பேரிடரில் அங்குள்ள குடும்பங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு உதவ நாங்கள் வந்துள்ளோம். இந்த ரொக்க உதவித் தொகை அவர்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்க உதவும் என நம்புகிறோம் என்றார் அவர்.
பெரானாங் பகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கத் தொகை வழங்குவது தவிர்த்து அவர்களுக்கு உணவுக் கூடைகள் வழங்கப்பட்டதோடு அவர்களின் வீடுகளைத் துப்புரவு செய்யும் பணியில் தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இது போன்ற உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் எனக் கூறிய அவர், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 15 லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டிலிருந்து இந்த நிதியதவி வழங்கப்படுகிறது என்றார்.