ஷா ஆலம், ஜன 31- தங்கள் பிள்ளைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்த அச்சம் கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னதாக மருத்துவ பரிசோதனை செய்யும்படி பெற்றோர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்நடவடிக்கையின் வழி பிள்ளைகளின் உடல் நிலை குறித்த விபரங்களை தெளிவாக அறிந்து கொள்வதற்குரிய வாய்ப்பு பெற்றோர்களுக்கு கிட்டும் என்று சிலாங்கூர் மாநில நடவடிக்கை பணிக்குழுவின் இயக்குநர் டாக்டர் முகமது ஃபர்ஹான் ருஸ்லி கூறினார்.
உண்மையில், தடுப்பூசி பெறுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. பெரும்பாலான பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் உடல் நிலை குறித்து தெரிந்திருக்கும். தயக்கம் இருப்பின் அவர்கள் முன்கூட்டியே தங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவ பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்றார் அவர்.
கடந்த எட்டு ஆண்டுகளில் பெற்றோர் புற்றுநோய் உள்பட எந்த நோயினாலும் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளும் மரபு ரீதியாக ஆரோக்கியமாக இருப்பர் என்று அவர் சொன்னார்.
சிறார்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி பெரியவர்களுக்கான தடுப்பூசியை விட வேறுபட்டது என்பதால் இது குறித்து பெற்றோர்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி பெற்றப் பின்னர் இருதய வீக்கம், மரணம் போன்றவை சம்பவிப்பது குறித்து சிலர் கவலைப்படுகின்றனர். ஆனால், இதுபோன்ற பிரச்னைகளால் ஏற்படும் மரணங்களைக் காட்டிலும் கோவி்-19 நோய்த் தொற்றினால் மரணம் ஏற்படும் சாத்தியம் மிக அதிகம் என்று அவர் குறிப்பிட்டார்.
வரும் பிப்ரவரி மாதம் தொடங்கி 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.