ஷா ஆலம், பிப் 1- செர்டாங், மேப்ஸ் விவசாய கண்காட்சி மையத்தில் அமைந்துள்ள கோவிட்-19 ஒருங்கிணைந்த சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் (பி.கே.ஆர்.சி.)2.0 நிலையத்தின் நடவடிக்கைகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக 320,000 வெள்ளி மதிப்பில் பல்வேறு உதவிகளை சிலாங்கூர் அரசு செய்துள்ளது. அந்த மையம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்ற சமயத்தில் இந்த உதவிகள் வழங்கப்பட்டதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார். முன்களப் பணியாளர்களுக்கு கையடக்க கணினிகள் விநியோகம், தளவாடங்கள் மற்றும் உணவு உதவி, அம்மையத்திலிருந்த சிறார் பராமரிப்பு மைய நிர்வாகச் செலவினம் ஆகியவையும் அதில் அடங்கும். இத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு உண்டான செலவு 320,000 வெள்ளியாகும் என்றார் அவர். அந்த மையத்திலிருந்த கடைசி நோயாளிகள் குழு கடந்த வாரம் வெளியேறியதைத் தொடர்ந்து அம்மையம் வரும் 8 ஆம் தேதியுடன் மீடப்படுகிறது. அந்த மையம் செயல்பட்ட 14 மாத காலத்தில் 166,000 கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்துள்ளது.