ஷா ஆலம், பிப் 2- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் நேற்று இயங்கலை வாயிலாக நடத்தப்பட்ட 2022 சீனப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வை 65,000 பேர் கண்டு களித்தனர். பல்லின மக்களின் கலாசார படைப்புகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வு மாநிலத் தலைவர்களின் முகநூல் மற்றும் மீடியா சிலாங்கூர் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டதாக பெளத்த மற்றும் தோ சமயங்களுக்கான செயல்குழுவின் தலைவர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார். இம்முறை நடைபெற்ற நிகழ்ச்சி மிகவும் வண்ணமயமாக இருந்தது. பல்லின மக்களின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளின் படைப்பு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இருந்தன. இந்நிகழ்ச்சியைக் காண்போரின் எண்ணிக்கையும் இம்முறை அதிகரித்துள்ளது என்றார் அவர். எல்லை கடப்பதற்கும் உற்றார் உறவினர்களைச் சந்திப்பதற்கும் இம்முறை வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதிக எண்ணிக்கையிலானோர் இந்நிகழ்ச்சியை இயங்கலை வாயிலாக கண்டு களித்ததோடு அங்பாவ் வெல்லும் போட்டியிலும் பங்கு கொண்டர் என்று அவர் குறிப்பிட்டார். இந்த 90 நிமிட நிகழ்ச்சியில் 55 கலைஞர்கள் பங்கு கொண்டு 10 விதமான படைப்புகளை வழங்கினர். கோவிட்,19 நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டுகளாக இந்த நிகழ்வு இயங்கலை வாயிலாக நடத்தப்படுகிறது.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/02/3-Dance-1536x1024-1-960x640.jpg)