கோலாலம்பூர், பிப் 4– நாட்டின் வட மற்றும் தென் பகுதிகளிலிருந்து கிள்ளான் பள்ளத்தாக்கு திரும்புவோர் பயண வழிகாட்டியைப் பின்பற்றும்படி பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனம் ஆலோசனை கூறியுள்ளது.
இம்மாதம் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை காலை 9.00 மணிக்கு முன்னதாகவே வாகனமோட்டிகள் நெடுஞ்சாலைக்குள் நுழைந்து விட வேண்டும் என்று அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சீனப்புத்தாண்டின் இரண்டாம் நாளான பிப்ரவரி 2 ஆம் தேதியிலிருந்து நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு அனைத்து மாநிலங்களிலிருந்தும் அதிகமான வாகனங்கள் நெடுஞ்சாலையைப் பயன்படுத்த தொடங்கி விட்டதாக அது கூறியது.
சீனப்புத்தாண்டு விடுமுறையை நீட்டித்துக் கொண்டவர்கள் வார இறுதியில் கிள்ளான் பள்ளதாக்கிற்கு திரும்புவர் என்பதால் வரும் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரித்து காணப்படும் அந்நிறுவனம் குறிப்பிட்டது.
ஆகவே, வாகனமோட்டிகள் பயண நேர வழிகாட்டியைப் பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று பிளஸ் நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை அதிகாரி டத்தோ ஜக்காரியா அகமது ஜபிடி கூறினார்.
வாகனமோட்டிகள் சீரான பயணத்தை மேற்கொள்வதை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடுகளை பிளஸ் நிறுவனம் செய்துள்ளதோடு பயணத்தின் போது பழுதடையும் வாகனங்களுக்கு வேண்டிய உதவிகளை பிளஸ்ரோண்டா குழு வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
டோல் சாவடிகளில் பயண இடையூறு ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக டச் அண்ட் கோ மற்றும் டச் அண்ட் கோ வோலட் ஆகியவற்றில் போதுமான அளவு பணம் இருப்பதை உறுதி செய்யும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்