ஷா ஆலம், பிப் 4- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி நிதி விரைவாக கிடைப்பதற்கு ஏதுவாக விண்ணப்பங்களை கணினியில் உள்ளிடும் பணியில் டீம் சிலாங்கூர் தன்னார்வலர் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரம் இப்பணியைத் தொடங்கிய அக்குழுவினர் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிதி பகிர்ந்தளிக்கப்படும் வரை தங்கள் பங்களிப்பை வழங்குவர் என்று கிள்ளான் மாவட்ட அதிகாரி முகமது பைசால் அப்துல் ராஜி கூறினார்.
கிள்ளான் நகராண்மைக் கழகம், சமூக மேம்பாட்டு இலாகா மற்றும் பிரதமர் துறையின் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு ஆகிய தரப்பினரும் இப்பணியில் தங்களுக்கு உதவி நல்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
வெள்ள நிவாரண நிதிக்கு 73,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றன. எங்கள் வசமுள்ள ஊழியர்கள் தங்களின் அன்றாடப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் இந்த விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு போதுமான ஆள்பலம் கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.
திங்கள் கிழமை தொடங்கி தினசரி 2,000 பேருக்கு வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என்பதோடு இப்பணி இம்மாத இறுதிக்குள் முற்றுப் பெறும் என்று அவர் முன்னதாக கூறியிருந்தார்.