சிரம்பான், பிப் 8– சுற்றுலா பேருந்து மரத்தை மோதி கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த மலேசிய இஸ்லாமிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் (யு.எஸ்.ஐ.எம்.) மாணவிகள் நால்வர் காயங்களுக்குள்ளாயினர். இச்சம்பவம் இன்று காலை பண்டார் பாரு நீலாயில் நிகழந்தது.
இவ்விபத்து தொடர்பில் தமது தரப்பு காலை 7.40 மணியளவில் தகவல் பெற்றதாக நீலாய் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உயர் அதிகாரி ரய்ஹான் சே மாட்11 கூறினார்.
அந்த நான்கு மாணவிகளும் கை மற்றும் முதுகெலும்பில் காயங்களுக்குள்ளானதாகக் கூறிய அவர், அம்மாணவிகள் பல்கலைக்கழகம் நோக்கி பயணம் மேற்கொண்ட போது இவ்விபத்து நிகழ்ந்ததாகச் சொன்னார்.
பண்டார் பாரு நீலாய் மெக்டோனால்டு எதிரே சாலையில் எண்ணெய் சிந்திருப்பது தொடர்பில் நாங்கள் தகவல் பெற்றிருந்தோம். அந்த எண்ணெய் கசிவினால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியிருக்கும் எனக் கருதுகிறோம் என்றார் அவர்.
காயமடைந்த மாணவிகள் அம்புலன்ஸ் வண்டி மூலம் சிரம்பான் துங்கு ஜாபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.