ஜோகூர் பாரு, பிப் 13- மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று பீடிக்காமலிருப்பதை உறுதி செய்ய நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை(எஸ்.ஒ.பி.)பின்பற்றி எஸ்.பி எம். தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்று அபரிமித உயர்வைக் கண்டாலும் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டப் பாதிப்பை எதிநோக்கிய மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்று கல்வி மூத்த அமைச்சர் டத்தோ டாக்டர் முகமது ராட்ஸி ஜிடின் கூறினார். எஸ்.ஒ.பி. நடைமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம் பள்ளிகள் சீராக நடைபெறுவதை உறுதி செய்யும் கடப்பாட்டை கல்வியமைச்சு கொண்டுள்ளது என்று அவர் சொன்னார். கடந்த 2020 பிப்ரவரி மாதம் தேர்வை நடத்திய அனுபவம் மற்றும் நம் வசமிருக்கும் முழுமையான எஸ.ஒ பி. நடைமுறைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கபட்டது என்று அவர் குறிப்பிட்டார். கோத்தா ஸ்டார் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொறுப்பாளர்களுடன் சந்திப்பு நடத்தியப் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். கடந்தாண்டு எஸ்.பி.எம். தேர்வு எழுதிய மாணவர்களை விட இவ்வாண்டு தேர்வு எழுதும் மாணவர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதையும் அவர் சுட்டிகாட்டினார். 2021 ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம் தேர்வு மார்ச் 2 ஆம் தேதி முதல் ஆம் தேதி வரை நடைபெறும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கோவிட்-19 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்ட போதிலும் அந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது என்று ராட்ஸி கூறினார். பள்ளிகள் சம்பந்தப்பட்ட தொற்று மையம் மிகவும் சிறியது. தங்குமிட வசதி இல்லாத 10,000 பள்ளிகளில் 5 விழுக்காட்டினருக்கு மட்டுமே நோய்த் தொற்று பீடித்துள்ளது என்றார் அவர்.