ஷா ஆலம், பிப் 13- சிலாங்கூர் அரசின் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் மார்ச் மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கிட்டைப் பெற பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம்.
தடுப்பூசி பெறுவதற்கான நேரம் மற்றும் தேதியை சம்பந்தப்பட்டவர்களே தேர்ந்தெடுக்கலாம் என்று செலங்கா செயலி கூறியது.
பற்றுச் சீட்டுக் குறியீட்டைப் பயன்படுத்தி இலவசமாக தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்ப நழுவ விடாதீர்கள் என செலங்கா தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் இம்மாத தொடக்கம் வரை செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்தின் கீழ் 74,000 பேர் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
இந்த ஊக்கத் தடுப்பூசித் திட்டத்திற்கு பொது மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக செல்கேர் கிளினிக் தலைமை நிர்வாகி டாக்டர் ஜீவராஜா அண்மையில் கூறியிருந்தார். மாநிலம் முழுவதும் உள்ள 13 செல்கேர் கிளினிக்குகளுக்கு தினசரி தலா 1,950 ஊக்கத் தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஊக்கத் தடுப்பூசி இயக்கத்தை தொகுதி அளவில் நடத்த சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தாங்கள் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.