ஷா ஆலம், பிப் 19 - ஆசிய குழு நிலையிலான பூப்பந்துப் போட்டியின் வெற்றியாளர் கிண்ண அரையிறுதிப் போட்டிகளை ரசிகர்கள் எளிதாகக் காணும் வகையில் செத்தியா சிட்டி மாநாட்டு மையத்திற்கு (எஸ்.சி.சி சி.) வெளியே ஐந்து அகண்ட திரைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு போட்டியின் போதும் 200 பேர் மட்டுமே அரங்கிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இளைஞர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார். இத்திட்டத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாக கூறிய அவர், அரங்கிற்கு வெளியே போடப்பட்டுள்ள இருக்கைகளை பெற பெரும் எண்ணிக்கையிலானோர் காத்திருப்பதை காணமுடிகிறது என்று அவர் சொன்னார். மலேசிய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் இருக்கைகளின் எண்ணிக்கை 800 ஆக உயர்த்தப்படும் என்று முகமது கைருடின் மேலும் தெரிவித்தார். மலேசிய ஆண்கள் அணி பி பிரிவில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு தேர்வாகியுள்ளது. அதே சமயம் பெண்கள் அணி ஒய் பிரிவில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு குழுக்களும் தென் கொரியாவுடன் மோதவுள்ளன.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/02/FW1223879_KL48_17022022_BEREGU-lpr-960x722.jpg)