டெங்கில், பிப் 22– இங்கு நேற்று பெய்த புயலுடன் கூடிய அடைமழையில் சைபர் வேலி கார் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த 20 கார்கள் மரம் விழுந்து சேதமடைந்தன.
நேற்று மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் அந்தக் கார் நிறுத்துமிடப் பகுதியில் இருந்த பல பெரிய மரங்கள் முறிந்து விழுந்தன. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.
வாடிக்கையாளரின் காரைத் தாம் பழுதுபார்த்துக் கொண்டிருந்த போது தனது கார் பழுதுபார்ப்பு பட்டறை முன்புறம் இருந்த பெரிய மரம் திடீரெனச் சாய்ந்த தாக முகமது ஹரி சோ ஜூசோ (வயது 36) கூறினார்.
அச்சமயத்தில் புயலுடன் கூடிய அடைமழை பெய்து கொண்டிருந்தது. கண நேரத்தில் அந்த மரம் வேறோடு சாய்ந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை நொறுக்கியது என்றார் அவர்.
இச்சம்பவத்தில் தனது கடையின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் ஐந்து கார்களும் சேதமுற்றதாகக் கூறிய அவர். இப்பகுதியில் கடந்த ஏழு ஆண்டுகளாகக் கடை நடத்தி வரும் தாம் இது போன்ற பேரிடரை எதிர்கொள்வது இதுவே முதன் முறை என்றார்.
இதனிடையே, புயல் சம்பவம் தொடர்பில் நேற்று மாலை 5.36 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து சைபர் ஜெயா தீயணைப்பு நிலையத்திலிருந்து ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்த தாகச் சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நேராஸாம் காமிஸ் கூறினார்.