ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

708,187  சிறார்கள் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர் 

கோலாலம்பூர், பிப் 25- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 19.9 விழுக்காட்டினர் அல்லது 708,187 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

“பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், நாட்டில் நேற்று வரை 1 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 114 பேர் அல்லது 61.1 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 46 ஆயிரத்து 836 பெரியவர்கள் அல்லது 97.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 26 ஆயிரத்து 005 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 99 ஆயிரத்து 784 பேர் அல்லது 90 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 91 ஆயிரத்து 056 பேர் அல்லது 92.9 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று 137,197 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதில் 49,994 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 965 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 88,247 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.

இதன் மூலம் பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 67 லட்சத்து 29 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 46 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.


Pengarang :