கோலாலம்பூர், மார்ச் 4- அதிக கனமான பள்ளிப் பைகள் பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்து முழுமையான தீர்வை காண்பதற்கான முயற்சியில் கல்வியமைச்சு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இவ்விவகாரம் தொடர்பான விரிவான விவரங்களை அமைச்சு அறிவிக்கும் என்று நாடாளுமன்ற இணையத்தளத்தில் நேற்று வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கனமான புத்தகப் பைகள் பிரச்னைக்கு முழுமையாக தீர்வு காண்பதற்கு இந்த அணுகுமுறையின் அமலாக்கம் மிக முக்கியமானதாக அது தெரிவித்தது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அதிக எடையுள்ள பள்ளிப் பைகளை அகற்றுவது தொடர்பான அனைத்து ஆலோசனைகள், நடவடிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் அனைத்து தரப்பினரின் அணுக்கமான ஒத்துழைப்பும் முக்கியம். மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் எப்போதும் உகந்த சூழலில் இருப்பதை உறுதி செய்ய அமைச்சு உறுதிபூண்டுள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது. அதிக எடையுள்ள பள்ளிப் பைகளின் பிரச்சனையைச் சமாளிக்க கல்வி அமைச்சு எடுத்துள்ள முயற்சிகள் குறித்து சிம்பாங் ரெங்கம் பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் டாக்டர் மஸ்லி மாலிக் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிவளித்தது. கனக்கும் புத்தகப் பை பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக பாட புத்தகங்களை மட்டுமே முழுமையாகச் சார்ந்திராத புதிய கற்றல் முறையை அமல்படுத்த கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதாக அவர் கேள்வியெழுப்பியிருந்தார். இவ்விவகாரத்திற்கு தீர்வு காணும் நோக்கில் 1994 இல் ஆரம்பப் பள்ளி மாணவர் பை எடை ஆய்வு, தொடக்கப் பள்ளி மாணவர் பை எடை ஆய்வு (2008) மற்றும் தொடக்கப் பள்ளி மாணவர் பை எடை ஆய்வு (2017) ஆகியவற்றை அமைச்சு நடத்தியுள்ளதும் அப்பதிலில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
ReplyReply allForward
|