சுபாங் ஜெயா மார்ச் 4- கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட மற்றும் முறையான அனுமதியின்றி வணிகம் புரிந்து வந்த 850 பேருக்கு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் வர்த்தக லைசென்ஸ் வழங்கியுள்ளது.
சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் மக்களுக்கு உதவும் மாநில அரசின் முயற்சிகேற்ப மாநகர் மன்றத்தின் இந்நடவடிக்கை அமைவதாக பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமீர் கூறினார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் வணிகர்களுக்கும் நாங்கள் முறையான வர்த்தக உரிமத்தை வழங்கியுள்ளதோடு பொருத்தமான வர்த்தக இடங்களையும் ஏற்பாடு செய்துள்ளோம் என்று அவர் சொன்னார்.
வர்த்தகம் செய்ய விரும்புவோர் அதற்கான உரிமம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். பெட்டாலிங் ஜெயாவில் பொருளாதார நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய விரும்புகிறோம் என்றார் அவர்.
இங்குள்ள மைடின் பேரங்காடியில் நேற்று நடைபெற்ற வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பள்ளி உபகரணப் பற்றுச் சீட்டுகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
முறையான அனுமதியின்றி வணிகத்தில் ஈடுபட்ட மற்றும் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 10,000 த்திற்கும் மேற்பட்டோருக்கு மாநில அரசு தற்காலிக வர்த்தக லைசென்ஸ்களை வழங்கியுள்ளதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கடந்த மாதம் 21 ஆம் தேதி கூறியிருந்தார்.