சுபாங் ஜெயா, மார்ச் 4- குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 65 குடும்பங்களுக்கு பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கான பற்றுச் சீட்டுகளை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் வழங்கியது.
மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் ஷோம் ஷோப்பிங் திட்டத்தின் கீழ் அவர்கள் 300 வெள்ளி மதிப்பிலான பற்றுச் சீட்டுகளைப் பெற்றுக் கொண்டனர்.
சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிச் சீருடைகள், காலணி, எழுது பொருள்களை வாங்குவதற்கு வகை செய்யும் இத்திட்டத்திற்காக மாநகர் மன்றம் 19,500 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமீர் கூறினார்.
குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கு பள்ளி உபகரண பற்றுச் சீட்டுகளை வழங்கும் திட்டம் கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அடுத்த மாதம் பள்ளித் தவணை தொடங்குவதற்கு முன்னர் இந்த உபகரணங்களை அவர்களிடம் ஒப்படைப்போம் என்று அவர் தெரிவித்தார்.
பெட்டாலிங் ஜெயாவை விவேக, நீடித்த மற்றும் ஆக்ககரமான நகராக உருவாக்கும் திட்டத்தின் கீழ் இந்த உதவித் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
சுபாங் ஜெயாவிலுள்ள மைடின் பேரங்காடியில் பள்ளி உபகரண உதவி பற்றுச் சீட்டு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு மட்டுமின்றி மூத்த குடிமக்கள் மற்றும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் தாங்கள் உதவிகளை நல்கி வருவதாக அவர் சொன்னார்.