கோல கிள்ளான், மார்ச் 4- இங்குள்ள வட துறைமுகத்தில் கடந்த மாதம் மேற்கொள்ளப் பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளில் மது பானங்கள் அடங்கிய ஆறு கொள்கலன்களை அரச மலேசிய சுங்கத் துறையின் மத்திய மண்டலத்தின் 11 பிரிவு (சிலாங்கூர்) பறிமுதல் செய்தது.
கடந்த மாதம் 14 முதல் 22 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட அச்சோதனை நடவடிக்கைகளில் 396,000 வெள்ளி மதிப்புள்ள 155,040 லிட்டர் மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்கத் துறையின் அமலாக்கம் மற்றும் கண்காணிப்பு பிரிவுக்கான துணைத் தலைமை இயக்குநர் டத்தோ அப்துல்லா ஜாபர் கூறினார்.
இச்சோதனை நடவடிக்கையின் போது முகவர் என சந்தேகிக்கப்படும் 30 வயதுடைய உள்நாட்டு ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அவர் சொன்னார்.
அந்த ஆறு கொள்கலன்களில் உள்ள மதுபானங்களும் 2017 ஆம் ஆண்டு சுங்கத் துறை சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பொருள்கள் என வகைப்படுத்தப்பட்டவை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அந்த மதுபானங்களுக்கான வரி சுமார் 22 லட்சத்து 94 ஆயிரம் வெள்ளியாகும். சோதனையின் போது அதிகாரிகளை ஏமாற்றுவதற்காக இதர பொருள்களுக்கு மத்தியில் அந்த மதுபானங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தாக அவர் சொன்னார்.
புலாக் கித்தாமில் உள்ள விஸ்மா கஸ்டம் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.