ECONOMY

மக்காவ் மோசடி- இரு மூதாட்டிகள் 390,500 வெள்ளியை இழந்தனர்

கப்பளா பாத்தாஸ், மார்ச் 9- இங்கு அண்மையில் நிகழ்ந்த இரு வேறு சம்பவங்களில் இரு மூதாட்டிகள் மக்காவ் மோசடிக் கும்பலிடம் 390,500 வெள்ளியை இழந்தனர்.

ஊழல் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக அச்சுறுத்தி அவ்விரு மூதாட்டிகளிடமிருந்து அத்தொகையை அந்த மோசடிக் கும்பல் பறித்ததாக செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ரட்ஸி அகமது கூறினார்.

தங்கள் வங்கிக் கணக்கிலிருந்த பணம் கட்டம் கட்டமாக எடுக்கப்பட்டதை அறிந்த 60 வயது மதிக்கத்தக்க அவ்விரு மூதாட்டிகளும் இச்சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் செய்ததாக அவர் சொன்னார்.

முதல் சம்பவத்தில் பணி ஓய்வு பெற்ற மூதாட்டி 148,000 வெள்ளியை அக்கும்பலிடம் இழந்துள்ளார். தன்னை அரசு தரப்பு வழக்கறிஞர் எனக் கூறிக் கொண்ட பெண்மணி ஒருவர் அந்த மூதாட்டியை தொலைபேசி வழி அழைத்து ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றக் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக மிரட்டியுள்ளார்.

கைது செய்யப்படாமலிருக்க வேண்டுமானால் தமது கோரிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அந்த பெண்மணி பாதிக்கப்பட்ட மூதாட்டியை மிரட்டியுள்ளார்.

விசாரணைக்காகவும்  பணம் பறிமுதல் செய்யப்படாமலிருக்கவும் புதிய வங்கிக் கணக்கைத் திறந்து பணம் முழுவதையும் அதில் மாற்றி விடும்படி உத்தரவிட்டுள்ளார்.

அச்சத்தில் உறைந்து போன அந்த மூதாட்டி அந்த பெண்மணியின் உத்தரவுப்படி அனைத்து பணத்தையும் புதிய வங்கி கணக்கிற்கு வங்கி கணக்கு பற்றிய விபரங்களையும் அவரிடம் தெரிவித்துள்ளார் என்று ஏசிபி  முகமது ரட்ஸி அறிக்கை ஒன்றில் கூறினார்.

தனது புதிய வங்கிக் கணக்கிலிருந்த பணம் மாயமானதைத் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து அந்த மூதாட்டி போலீசில் புகார் செய்ததாக அவர் சொன்னார்.

மற்றொரு சம்பவத்தில் தன்னை காப்புறுதி முகவர் எனக் கூறிக் கொண்ட நபர் ஒருவர் மூதாட்டி ஒருவரிடம் 242,500 வெள்ளியை மோசடி செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :