கோலாலம்பூர், மார்ச் 11– இங்குள்ள அம்பாங் தாமான் பெர்மாய் 2 குடியிருப்பு பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட நிலச் சரிவில் உயிரிழந்த இரண்டாவது நபரின் சடலம் நேற்றிரவு 10.58 மணியளவில் மீட்கப்பட்டது.
மண்சரிவில் பாதிக்கப்பட்ட வீடு ஒன்றின் உரிமையாளர் என அடையாளம் காணப்பட்ட அந்த நபரின் சடலம் வீட்டிற்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்டப் போலீஸ் தலைவர் ஏசிபி முகமது ஃபாருக் ஏஷாக் கூறினார்.
அடையாளம் காணும் பணிக்காக அந்த ஆடவரின் சடலம் அம்பாங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்த இந்த மண்சரிவு சம்பவத்தில் அந்த வீடு முற்றாக அழிந்ததோடு அது அசல் இடத்திலிருந்து சற்று தூரம் நகர்ந்த நிலையில் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தின் போது மண்ணில் புதையுண்டிருக்கலாம் என நம்பப்படும் ஒரு குடியிருப்பாளர் மற்றும் ஆயர் சிலாங்கூர் நிறுவனப் பணியாளர் ஆகியோரைத் தேடும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.