சிரம்பான், மார்ச் 13- அடுத்த வாரம் புதிய பள்ளித் தவணை திறக்கப்படுவதற்கு முன்னர் 50 விழுக்காட்டு சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்த சுகாதார அமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது.
பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 50 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை தாங்கள் உறுதி செய்ய விரும்புவதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
கோவிட்-19 நோய்த் தொற்றினால் பீடிக்கப்படும் பட்சத்தில் கடுமையான தாக்கம் ஏற்படுவதிலிருந்து விடுபடுவதற்கு ஏதுவாக தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசியைச் செலுத்தும்படி பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
கோவிட்-19 நோய்த் தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதுவரை 35 விழுக்காட்டுச் சிறார்கள் மட்டுமே தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் பெற்றுள்ளனர் என்று அவர் சொன்னார்.
பொறுத்திருந்து பார்ப்போம் என்ற போக்கு இனியும் வேண்டாம். இன்னும் ஒரு வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. தங்கள் பிள்ளைகளுக்கு விரைந்து தடுப்பூசி பெறும்படி பெற்றோர்களை நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். தடுப்பூசியினால் நோய்ப் பரவலைத் தடுக்க முடியாது. ஆனால் அந்நோயின் கடும் பாதிப்பிலிருந்து அது பாதுகாப்பளிக்கும் என்றார் அவர்.
மலேசிய மருத்துவ உதவியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று இங்கு நடைபெற்ற சமூக சேவைத் திட்டத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.