ஷா ஆலம், மார்ச் 16– ஸ்மார்ட் சிலாங்கூர் C5i நடவடிக்கை மையத்தின் பணி நிரலில் கூடுதல் அம்சமாக மலைச்சாரல் கண்காணிப்பும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று லெம்பா ஜெயா சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
அந்தக் கட்டுப்பாட்டு மையத்தின் உருவாக்கத்தைப் பாராட்டிப் பேசிய ஹனிசா தல்ஹா, அண்மைய காலமாக அதிகரித்து வரும் மழைப் பொழிவின் காரணமாக அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தாம் இந்தப் பரிந்துரையை முன்வைப்பதாகக் கூறினார்.
அண்மையில் அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாயில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரிடர் ஏற்பட்டு உயிர்ப்பலியும் ஏற்பட்டது. இந்த விஷயத்தில் நாம் அதிகச் சிரத்தை எடுக்க வேண்டிய நிருபந்தம் ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
சிலாங்கூர் சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உரையாற்றிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேரிடர் மேலாண்மைக்கான கட்டுப்பாட்டு மற்றும் முதன்மை கட்டளை மையாக விளங்கும் C5i மையத்தின் ஆற்றல் மேலும் வலுப்படுத்தவும் விரிவாக்கப்பட வேண்டும் என மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் நேற்று முன்தினம் மாநில சட்டமன்ற கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது கூறியிருந்தார்.