ஷா ஆலம், மார்ச் 23- பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியை இன்னும் பெறாமலிருக்கும் சிலாங்கூர் மக்கள் வரும் ஏப்ரல் 1 தேதிக்குள் அதனை பெற்றுக் கொள்ளுமாறு மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கேட்டுக் கொண்டுள்ளார்.
நாடு எண்டமிக் எனப்படும் குறுந்தொற்று கட்டத்திற்கு நுழைவதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில் ஊக்கத் தடுப்பூசி பெறுவது தொடர்பான அறிவிப்பு விடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
இந்த ஊக்கத் தடுப்பூசியைப் பெறும் நடவடிக்கை நமக்கு நமது குடும்பத்தினருக்கும் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதற்கான தகுதியை இழக்காமலிருக்க சினோவேக் தடுப்பூசியைப் பெற்றவர்களும் மூத்த குடிமக்களும் விரைந்து ஊக்கத் தடுப்பூசியைப் பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரிலுள்ள தடுப்பூசி மையங்களை covid-19.moh.gov.my எனும் அகப்பக்கம் வாயிலாக கண்டறிவதன் மூலம் சிறார்களுக்கான தடுப்பூசியை நேரடியாக பெற முடியும்.
நாட்டில் நேற்று வரை 1 கோடியே 55 லட்சத்து 7 ஆயிரத்து 221 பேர் அல்லுத 65.9 விழுக்காட்டு பெரியவர்கள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது.