கோலாலம்பூர், மார்ச் 25- இங்குள்ள ஜாலான் துன் சம்பந்தன் இடைநிலைப்பள்ளி அருகே கிள்ளான் ஆற்றில் இரு பாகிஸ்தானிய ஆடவர்கள் காணாமல் போனதாக நேற்று புகார் செய்யப்பட்டது.
நேற்று பிற்பகல் 12.09 மணியளவில் இச்சம்பவம் தொடர்பில் புகார் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து ஜாலான் ஹாங் துவா மற்றும் பூச்சோங் தீயணைப்பு நிலையங்களிலிருந்து 18 வீரர்கள் அடங்கிய குழு தேடி மீட்கும் நடவடிக்கையைத் தொடக்கியதாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மைய பேச்சாளர் கூறினார்.
நேற்று மாலை 4.07 மணியளவில் சம்பவ இடத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் முதலாவது நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட வேளையில் இரண்டாவது நபரின் சடலம் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கம்போங் தெங்கா ஆற்றுப் படுகையில் கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.
இந்த மீட்புப் பணியில் நான்கு படகுகளும் இரு முக்குளிப்பு சாதனங்களும் பயன்படுத்தப்பட்டதாக கூறிய அவர், மீட்கப்பட்ட சடலங்கள் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்றார்.