ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தனியார் நிறுவனத்திடம் மைசெஜாத்ரா விற்கப்பட்டது ஏன்? அன்வார் கேள்வி 

ஷா ஆலம், மார்ச் 27– சுகாதார அமைச்சின் கண்காணிப்பில் இருந்த மைசெஜாத்ரா செயலி தனியார் நிறுவனத்திடம்  விற்கப்பட்டது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேள்வியெழுப்பியுள்ளார்.

வெளிப்படை போக்கை பிரதிபலிக்கும் விதமாக அந்த செயலியை விற்கும் நடவடிக்கை பொது டெண்டர் முறையில் மேற்கொள்ளாதது குறித்து அரசாங்கம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரே நிறுவனமாக மைஎஸ்ஜே சென்.பெர்ஹாட் மட்டும் விளங்குவது ஏன் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

மைசெஜாத்ரா செயல்பாடுகள் தொடர்பில் மைஎஸ்ஜே நிறுவனம் கொண்டுள்ள பணி இலக்கு மற்றும் ஆற்றல் என்ன என்று கேள்வியெழுப்பிய அவர், அந்த செயலியில் உள்ள தரவுகளை மைஎஸ்ஜே உள்பட மூன்றாம் தரப்பினர் தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதை சுகாதார அமைச்சு எவ்வாறு உறுதி செய்யப் போகிறது என்றும் வினவினார்.

தனிநபர் சுகாதார தரவுகள், மைசெஜாத்ரா இரகசிய காப்பு கொள்கை, தனிநபர் விபர பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு மைசெஜாத்ரா கட்டுப்படும் என்ற சுகாதார அமைச்சின் உத்தரவாதம் இந்த புதிய நிறுவனத்திற்கும் செல்லுபடியாகுமா  என்பது தெளிவாக விளக்கப்பட வேண்டும் என அறிக்கை ஒன்றில் கூறினார்.

பொதுமக்கள் மைசெஜாத்ரா செயலியில் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் சந்தை பொருள்களை பிரபலப்படுத்துவது, கண்காணிப்பது அல்லது பாகுபாடு காட்டுவதற்கும்  பயன்படுத்தாமலிருப்பதை உறுதி செய்வதில் மைஎஸ்ஜே நிறுவனத்தின் கடப்பாடு என்ன என்று அவர் மேலும் வினவினார்.

நேரடி பேரத்தின் மூலம் மைசெஜாத்ராவை மைஎஸ்ஜே நிறுவனத்திற்கு விற்பனை செய்ய சுகாதார அமைச்சுக்கு அமைச்சரவை கடந்தாண்டு நவம்பர் 26 ஆம் தேதி அனுமதி வழங்கியிருந்ததாக அன்வார் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :