கோலாலம்பூர், ஏப் 2- நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் சிலவற்றில் இன்று காலை தொடங்கி மதியம் வரை வாகனங்கள் மெதுவாக நகர்வதை காண முடிந்தது. இந்நிலை இன்று மாலை வரை தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநகர்வாசிகள் வார இறுதி விடுமுறையைப் பயன்படுத்தி சொந்த ஊர்களுக்குச் செல்லும் காரணத்தினால் நெடுஞ்சாலைகளில் வாகன எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான சாத்தியம் உள்ளதாக மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் பேச்சாளர் கூறினார்.
கிழக்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் கேம்பாக் டோல் சாவடிக்கு முன் 500 மீட்டர் வரை நெரிசல் காணப்படுவதோடு சுங்கை பீசி டோல் சாவடியில் மாநகர் நோக்கிச் செல்லும் தடத்திலும் இந்நிலை நிலவுகிறது என அவர் சொன்னார்.
சாலை விதிகளை முறையாக கடைபிடித்து கவனமுடன் வாகனத்தை செலுத்தும்படி வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வடக்கு நோக்கிச் செல்லும் தடத்தில் ஸ்கூடாய் டோல் சாவடிக்கு முன்னரும் பாசீர் கூடாங் நோக்கிச் செல்லும் சாலையின் இரு மருங்கிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.