ஷா ஆலம், ஏப் 5- வரும் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதில் அம்பாங் வட்டார மக்களின் கருத்தை இணையம் வாயிலாகப் பெற அம்பாங் ஜெயா மாநகர் மன்றம் விரும்புகிறது.
பொது மக்கள் தங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் இயங்கலை வாயிலான கேள்வி பதில் இணைப்புகள் மூலம் வழங்கலாம் என்று அது தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
அந்த வரவு செலவுத் திட்டம் பொருத்தமானதாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் அம்பாங் ஜெயா மக்களின் விருப்பங்களையும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலும் இருப்பதை உறுதி செய்ய இப்பரிந்துரைகளும் கருத்துகளும் தேவைப்படுவதாக அது கூறியது.
தூய்மை, வீடுகள், சுற்றுச்சூழல் மாசுபாடு, பாதுகாப்பு, போக்குவரத்து, இயற்கை பேரழிவுகள் மற்றும் பல போன்ற சிக்கல்களைக் கையாள்வதில் பொது மக்கள் வழங்கும் யோசனைகள் பயனளிப்பதாக இருக்கும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
தங்கள் கருத்துகளைப் பகிர விரும்பும் அம்பாங் வட்டார மக்கள் https://docs.google.com/…/1FAIpQLSf5U1KFLLZqOV…/viewform எனும் அகப்பக்கத்தை தொடர்பு கொள்ளலாம்.