ECONOMYSELANGOR

தாமான் புஞ்சா ஜாலில் பகுதியில் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய குத்தகையாளருக்கு உத்தரவு

ஷா ஆலம், ஏப் 8- தாமான் புஞ்சா ஜாலில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட குழாய்களைப் பதிக்கும் பணிகள் காரணமாக பழுதடைந்த சாலையை சரி செய்யும்படி சம்பந்தப்பட்ட குத்தகையாளருக்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநகர் மன்றத்தின் உத்தரவை ஏற்று சம்பந்தப்பட்ட சாலையில் பழுதுபார்ப்பு பணிகளை கூடுமானவரை இன்றே தொடங்குவதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் வாக்குறுதியளித்துள்ளது என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் வியூக மேலாண்மைத் துறையின் துணை இயக்குநர் அஸ்பரிசார் அப்துல் ரஷிட்  கூறினார்.

சம்பந்தப்பட்ட குத்தகையாளர் பழுதுபார்ப்பு பணிகளை மேற்கொள்ளாது போனால் மாநகர் மன்றமே சொந்தமாக குத்தகையாளரை நியமித்து அச்சாலையை சீரமைக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அப்பணிக்கு உண்டாகும் செலவுத் தொகையை குழாய் பதிக்கும் பணிக்காக சம்பந்தப்பட்ட குத்தகையாளர் செலுத்தியுள்ள வைப்புத் தொகையிலிருந்து கழித்துக் கொள்வோம் என்று அவர் சொன்னார்.

குழாய்களைப் பதிக்கும் பணி அப்பகுதியில் முற்றுப் பெற்றுள்ள நிலையில் குழாய்களின் தாக்கும் சக்தி மீதான சோதனைப் பணி ஏப்ரல் மாதம் மத்தியில் முற்றுப் பெற்றப் பின்னரே சாலையை முழுமையாக சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.


Pengarang :