ECONOMYNATIONAL

கெஅடிலான் கட்சித் தேர்தல்- தலைவர் பதவியைத் தற்காக்க வேட்பு மனுத் தாக்கல் செய்தார் அன்வார்

ஷா ஆலம், ஏப் 11- கெஅடிலான் கட்சியின் 2022/2024 ஆம் தவணைக்கான தலைவர் பதவிக்கு நடப்புத் தலைவரான டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராஹிம் மீண்டும் போட்டியிடுகிறார்.

கட்சியின் “அடில்“ செயலி வாயிலாக தாம் தலைவர் பதவிக்கான வேட்பு மனுவை சற்று முன்னர் தாக்கல் செய்ததாக எதிர்க்கட்சித் தலைவருமான அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறினார்.

“அடில்“ செயலி வாயிலாக எனது வேட்பு மனுவை இன்று பிற்பகல் 12.14 மணிக்கு தாக்கல் செய்தேன்  என்று அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாண்டிற்கான கெஅடிலான் தேர்தலில் கட்சியின் 222 தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த வெள்ளிக் கிழமை தொடங்கி நேற்று வரை நடைபெற்ற வேளையில் மத்திய தலைமைத்துவ பதவிகளுக்கான (எம்.பி.பி.) வேட்பு மனுத்தாக்கல் இன்று நடைபெறுகிறது.

தொகுதி மற்றும் எம்.பி.பி. பதவிகளுக்கான வேட்புமனுத்தாக்கல் “அடில்“ செயலி வாயிலாக மேற்கொள்ளப்படுகிறது.

கெஅடிலான் கட்சியின் இரண்டாவது தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் விளங்குகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி அவர் டத்தின்ஸ்ரீ வான் அஜிசா இஸ்மாயிலிடமிருந்து அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.


Pengarang :