ECONOMYPBTSELANGOR

சபாக் பெர்ணம், உலு லங்காட்டில் இவ்வாரம் மலிவு விற்பனை மலிவு விற்பனை இயக்கம்

ஷா ஆலம், ஏப் 15- சிலாங்கூர் அரசின் மக்கள் பரிவு விற்பனைத் திட்டம் இவ்வாரம் சபாக் பெர்ணம் மற்றும் உலு லங்காட் ஆகிய மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

சுங்கை பெசார், டத்தாரான் தொங்காக் 9 மற்றும் சிகிஞ்சான் சட்டமன்ற உறுப்பினர் சேவை மைய வளாகம் ஆகிய இடங்களில் நாளை சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இந்த மலிவு விற்பனை இயக்கம் நடைபெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

ஞாயிற்றுக் கிழமையன்று காஜாங், தாமான் ஜெனாரிஸ் குடியிருப்பாளர் சங்க நடவடிக்கை மையம் மற்றும் உலு லங்காட், பெக்கான் பத்து 14, காம்பளெக்ஸ் பெங்குளு முக்கிம் உலு லங்காட் ஆகிய இடங்களில் இவ்வியக்கம் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வாரம் மலிவு விலை விற்பனைத் திட்டம் சிகிஞ்சான், சுங்கை பெசார், பெக்கான் பத்து மற்றும் காஜாங்கில் நடத்தப்படவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பொது மக்கள் பயன்பெறுவதற்கு ஏதுவாக சமையலுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் இத்திட்டத்தின் கீழ் மலிவான விலையில் விற்கப்படும் என்றார் அவர்.

இத்திட்டத்தின் கீழ் கோழி 12.00 வெள்ளி விலையிலும் முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளி விலையிலும் இறைச்சி கிலோ 35.00 வெள்ளி விலையிலும் கெம்போங் மற்றும் செலாயாங் மீன் கிலோ 8.00 வெள்ளி விலையிலும் சமையல் எண்ணெய் ஒரு கிலோ 2.00 வெள்ளி விலையிலும் விற்கப்படும் என மந்திரி புசார் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட விளக்கப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொருள் விலையேற்றம் காரணமாக சிரமத்தை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கு உதவும் நோக்கில் வரும் நோன்பு பெருநாள் வரை மாநிலத்தின் 64 இடங்களில் இந்த மலிவு விற்பனை இயக்கத்தை மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.


Pengarang :