பெரா, ஏப் 17- பெருநாள் காலத்தின் போது சபா, சரவா ஆகிய மாநிலங்களுக்கான கட்டணத்தை உயர்துவதன் மூலம் அதிகப்படியான லாபம் சம்பாதிக்க முயலாதீர் என்று விமான நிறுவனங்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெருநாள் காலத்தின் போது அவ்விரு மாநிலங்களுக்கான பயணக் கட்டணம் 500 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுவதாக அவர் சொன்னார்.
இந்த கட்டண உயர்வு அதிகப்பட்சமானது என்பதோடு போக்குவரத்துக்கு விமானப் பயணத்தைத் தவிர மாற்று வழி இல்லாத மக்களுக்கு சுமையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இவ்விவகாரத்தில் 2011 ஆம் ஆண்டு விலைக்கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாபத் தடுப்புச் சட்டத்தின் விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பதை விசாரிக்கும்படி உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கியை தாம் பணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சிறிய நிறுவனமோ, பெரிய நிறுவனமோ அது பற்றி நமக்கு கவலையில்லை. அனைத்து தரப்பினருக்கும் எதிராக பயனீட்டாளர் விவகார அமைச்சு உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். மக்கள் நலனை காப்பதற்கு ஏதுவாக அதிகப்படியான லாபத்தை ஈட்டும் நிறுவனங்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு நெருக்குதல் தருவதற்கு வணிகர்கள் பெருநாள் காலத்தை தங்களுக்கு சாதமாக பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார் அவர்.
இன்று இங்குள்ள எம்.ஜி. கூப்மார்ட் பேரங்காடியை திறந்து வைத்து உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார்.