ஷா ஆலம், ஏப் 21- இம்மாதம் தொடக்கத்தில் நாடு எண்டமிக் கட்டத்திற்கு மாறியதைத் தொடர்ந்து இங்குள்ள செக்சன் 13, ராஜா துன் ஊடா நூலகத்திற்கு வருகை புரிவோரின் எண்ணிக்கை உயர்வு கண்டுள்ளது.
முன்பு வார இறுதி நாட்களில் 400 பேர் வரை மட்டுமே நூலகத்திற்கு வருகை புரிந்த நிலையில் இப்போது அந்த எண்ணிக்கை 2,000 ஆக உயர்வு கண்டுள்ளதாக சிலாங்கூர் பொது நூலக கழகத்தின் இயக்குநர் டத்தின் படுகா மஸ்துரா முகமது கூறினார்.
பெருந்தொற்று பரவுவதற்கு முன்னர் வார இறுதி நாட்களில் 5,000 முதல் 8,000 பேர் வரை இங்கு வருகை புரிந்தனர். பின்னர் அந்த எண்ணிக்கை 400 பேராக குறைந்தது. எண்டமிக் கட்டத்திற்கு நாடு மாறியதைத் தொடர்ந்து 1,500 முதல் 2,000 பேர் வரை வருகை புரிகின்றனர் என்றார் அவர்.
வார நாட்களில் 700 முதல் 1,000 பேர் வரை இந்த நூலகத்திற்கு வருவதாக சிலாங்கூர் கினியிடம் அவர் தெரிவித்தார்.
மைசெஜாத்ரா செயலியில் பதிவு செய்வது மற்றும் முகக் கவசம் அணிந்திருப்பது போன்ற வழக்கமான எஸ்.ஒ.பி. நடைமுறைகள் இங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.