குருண், ஏப் 21- நோன்புப் பெருநாளின் போது கோழி மற்றும் முட்டையின் கையிருப்பு போதுமான அளவு உள்ள இருக்கும் என்று விவசாயம் மற்றும் உணவுத் தொழிலியல் அமைச்சு உத்தரவாதம் அளித்துள்ளது.
அவ்விரு உணவுப் பொருள்கள் பற்றாக்குறையை எதிர்நோக்கவில்லை என்பதோடு கையிருப்பும் போதுமான அளவு உள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ரோனால்டு கியாண்டே கூறினார்.
நாங்கள் கோழி மற்றும் முட்டை உற்பத்தி பண்ணைகளை கண்காணித்து வருகிறோம். பெருநாள் காலத்தின் போது போதுமான அளவு கையிருப்பு இருக்கும் என்று பண்ணை உரிமையாளர்கள் வாக்குறுதியளித்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
இந்த உணவுப் பொருள்களின் உற்பத்தியில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். அதன் விலை தொடர்பான விவகாரங்களை உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சு கண்காணிக்கும். என்று அவர் தெரிவித்தார்.
இன்று இங்கு ஐக்கிய அரபு சிற்றரசின் ஹோட்பேக் பேக்கஜிங் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கான கட்டுமானப் பணியைத் தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இறக்குமதி செய்யப்படும் கால்நடைத் தீவனங்களின் விலை உயர்வு கண்ட காரணத்தால் கால்நடை வளர்ப்புக்கான செலவினமும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.