ஈப்போ, ஏப் 22- அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் நோன்புப் பெருநாள் மற்றும் பள்ளி விடுமுறை காலத்தில் பேராக் மாநிலத்தில் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் கொண்ட 47 இடங்களை தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அடையாளம் கண்டுள்ளது.
பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இடங்களில் பெரும்பாலானவை லுமுட் மாவட்டத்திலுள்ள குளங்கள், கால்வாய்கள், ஆறுகள் மற்றும் கடற்கரைகளை உள்ளடக்கியுள்ளதாக அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஹம்டான் வாஹிட் கூறினார்.
பெருநாள் காலத்தின் போது பெரும்பாலோர் தங்கள் உறவினர்களுடன் அருவிகள் போன்ற நீர் சார்ந்த பொழுது போக்கு மையங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது.
பேராக் மாநிலத்தைப் பொறுத்த வரை, அதிக ஆபத்து நிறைந்த ஏழு இடங்களையும் மிதமான ஆபத்து நிறைந்த 35 முதல் 40 இடங்களையும் நாங்கள் அடையாளம் கண்டுள்ளோம். இவ்விடங்களில் நீர் நிலைகள் சம்பந்தப்பட்ட ஐந்து உயிரிழப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று அவர் சொன்னார்.
நேற்று இங்கு 2021 ஆம் ஆண்டிற்கான சிறந்த சேவைக்கான விருதளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இத்தகைய ஆபத்து நிறைந்த இடங்களில் தன்னார்வலர் தீயணைப்பு அதிகாரிகள் பிரிவு, நீர் பாதுகாப்பு மற்றும் மீட்பு குழுவினர் எந்நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர் என அவர் சொன்னார்.
இது தவிர, தோக் பாலி, பெசுட், பந்தாய் சஹாயா பூலான், லுமுட் ஆகிய இடங்களில் கண்காணிப்பு குழுக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.