கோலாலம்பூர், ஏப் 28- மலேசிய போட்டி விளையாட்டுகளில் (சுக்மா 2022) சிலாங்கூர் பங்கேற்கும் போட்டிகள் குறித்து மாநில அரசும் சிலாங்கூர் விளையாட்டு மன்றமும் (எம்.எஸ்.என்.) விவாதித்து வருகின்றன.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் பொருளாதார சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு அம்சங்களை ஆராய வேண்டியுள்ளதாக விளையாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.
விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வதில் மற்ற மாநிலங்களைப் போலவே நாமும் சில சிக்கல்களை எதிர்நோக்குகிறோம். பெருந்தொற்று பரவல் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
புக்கிட் கியாராவிலுள்ள தேசிய விளையாட்டாளர் சமூக நல வாரியத்தில் விளையாட்டாளர்களுக்கு நோன்புப் பெருநாள் அன்பளிப்புகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
சுக்மா 2022 போட்டியில் 60 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடிக்க சிலாங்கூர் இலக்கு கொண்டுள்ளது.