ஜோகூர் பாரு, ஏப் 28– வெளிநாட்டுப் பதிவு எண்களைக் கொண்ட வாகனங்கள் உதவித் தொகை வழங்கப்பட்ட ரோன்95 ரக பெட்ரோலை நிரப்பியது தொடர்பில் 18 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி முதல் தேதி தொடங்கி நேற்று வரை இந்த புகார்கள் கிடைக்கப்பெற்றதாக உள்நாட்டு வணிக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி கூறினார்.
இச்சம்பவங்கள் யாவும் ஜோகூர் மாநிலத்தில் நிகழ்ந்ததாக கூறிய அவர், இதன் தொடர்பில் 9 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதோடு சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலைய உரிமையாளர்களும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்று சொன்னார்.
இச்சம்பவம் தொடர்பில் 1961 ஆம் ஆண்டு விநியோக கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரோன்95 பெட்ரோலை நிரப்பும் அந்நிய நாட்டினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எண்ணம் இல்லை. ஜோகூர் மாநிலத்தில் மட்டும் இத்தகைய புகார்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அண்டை நாடுகளுடன் எல்லையைக் கொண்டுள்ள இதர மாநிலங்களில் இப்பிரச்னை எழவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பிரச்னையைக் களைவதற்கு ஏதுவாக அறிவிப்பு பலகைகளை வைக்கும்படி பெட்ரோல் நிலைய உரிமையாளர்களைத் தாங்கள் கேட்டுக் கொள்வதாகவும் அவர் கூறினார்.