ஷா ஆலம், ஏப்ரல் 30: சிலாங்கூரில் கை, கால் மற்றும் வாய் புண் நோய் (HFMD) வாராந்திர சம்பவங்களின் எண்ணிக்கை இப்போது எச்சரிக்கை அளவைத் தாண்டியுள்ளது என்று சிலாங்கூர் சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் ஷாரி ங்காடிமான் கூறினார்.
ஏப்ரல் 27 ஆம் தேதி நிலவரப்படி, மாநிலத்தில் மொத்தம் 5,346 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது பொதுவாக ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது.
“இந்நோய்த் தொடர்புடைய 112 தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 547 சம்பவங்கள் அல்லது 95 விழுக்காடு பாலர் பள்ளிகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களை உள்ளடக்கியது, ஆனால் இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கை,கால்,வாய்ப் புண் நோயின் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறிப்பாக குழந்தை பராமரிப்பு இல்லங்களை நடத்துவோர் சுத்தத்தை பேண வேண்டும். அம்மையங்களில் உள்ள தரை, கழிப்பறை மற்றும் அச்சிறார்கள் பயன்படுத்தும் பொருள்கள் எப்போதும் சுத்தமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று டாக்டர் ஷாரி வலியுறுத்தினார்.
காய்ச்சல் மற்றும் கை, கால், வாய் மற்றும் நாக்கில் கொப்புளங்கள் போன்ற கை,கால்,வாய்ப் புண் நோய்த்தொற்றின் அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகளின் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம், சோப்பு கொண்டு கைகளைக் கழுவுதல் மற்றும் எப்போதும் விளையாட்டு பொருள்களை சுத்தம் செய்வதையும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கை,கால்,வாய்ப் புண் என்பது வைரஸ் தொற்றுகளால் ஏற்படும் ஒரு நோயாகும், குறிப்பாக Coxsackie வகைகளான A16 மற்றும் Enterovirus 71 (E71), இது நாசி திரவம், உமிழ்நீர், கொப்புளங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவரின் மலம் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது