புத்ரா ஜெயா, மே 2– கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியத்தை கருத்தில் கொண்டு புத்ரா ஜெயா மற்றும் கிள்ளான் துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைகளில் தலா இருபது கட்டில்களைக் கொண்ட பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை மையங்கள் திறக்கப்படவுள்ளன.
நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வரும் காரணத்தால் செர்டாங் மலேசிய விவசாய மற்றும் கண்காட்சி மையத்திலுள்ள (மேப்ஸ்) மத்திய மண்டலத்திற்கான பி.கே.ஆர்.சி. மையம் இம்மாதம் மூடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.
நோயாளிகளின் எண்ணிக்கை குறைவு காரணமாக பயன்பாட்டில் இல்லாத போதிலும் புத்ரா ஜெயா மற்றும் கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைகளில் பி.கே.ஆர்.சி. மையங்களை நாங்கள் திறந்துள்ளோம். தற்போதைய கோவிட்-19 நிலவரத்தைப் பார்த்தால் 99.5 விழுக்காட்டினர் நோய்க்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்டப் பாதிப்பைக் கொண்டுள்ளனர்.
அதே சமயம், அதிகம் நோய்த் தாக்கம் கொண்ட மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் மிகவும் குறைவாகவே உள்ளது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் நோயாளிகளின் அதிகரிப்பை எதிர்கொள்ளும் ஆற்றல் எங்களிடம் உள்ளது என்றார் அவர்.
நோன்புப் பெருநாளின் முதல் நாளான இன்று புத்ரா ஜெயா மருத்துவமனைப் பணியாளர்களுடன் பெருநாள் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.