ஜோகூர் பாரு, மே 4- மெர்சிங், ஜாலான் நித்தார் 8வது கிலோமீட்டரில் நேற்றிரவு 8.00 மணியளவில் நிகழ்ந்த மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் முதியவர் ஒருவர் உயிழந்ததோடு மேலும் எண்மர் காயமுற்றனர். இவ்விபத்தில் தலை மற்றும் உடலில் கடும் காயங்களுக்குள்ளான யூசுப் டெரிஸ் (வயது 60) என்ற முதியவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாக மெர்சிங் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் க்ரில் எட்வர்ட் நுயிங் கூறினார். அந்த ஆடவர் தனது ஹோண்டா சிட்டி காரில் பெல்டா நித்தார் 2 பகுதியிலிருந்து மெர்சிங் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர் மேலும் சொன்னார். அந்த ஹோண்டா சிட்டி கார் முன்னால் இருந்த காரை முந்த முயன்ற போது எதிரே வந்த இரு கார்களுடன் நேருக்கு நேர் மோதியதாக அவர் தெரிவித்தார். ஹோண்டா சிட்டி கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிழந்த வேளையில் அக்காரில் பயணம் செய்த பெண்மணி ஒருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் 41 (1) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
![](https://selangorkini.my/ta/wp-content/uploads/2022/05/KEMALANGAN-NEW-1536x768-1-960x480.jpg)