லுமுட், மே 5- கட்டுப்பாட்டை இழந்த வேன் ஒன்று சாலையோரத் தடுப்பை மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த மூவர் காயங்களுக்குள்ளான வேளையில் மேலும் எழுவர் தெய்வாதீனமாக உயிர்த் தப்பினர்.
இச்சம்பவம் பங்கோர் தீவிலுள்ள ஜாலான் தெலுக் நிப்பாவில் நேற்று மாலை 5.00 மணியளவில் நிகழ்ந்தது.
இந்த விபத்து தொடர்பில் மாலை 5.02 மணியளவில் அவசர அழைப்பை தாங்கள் பெற்றதாக பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை அறைப் பேச்சாளர் கூறினார்.
சம்பவம் நிகழ்ந்த போது அந்த வேனில் ஓட்டுநர் உள்பட பத்து பேர் பயணம் செய்ததாக அவர் கூறினார். அவர்களில் மூவருக்கு காயங்கள் ஏற்பட்ட வேளையில் எஞ்சிய எழுவர் காயமின்றி உயிர்த்தப்பினர் என்றார்.
அந்த வேன் கட்டுப்பாட்டை இழந்த காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் வேனில் சிக்கியவர்கள் பொது மக்களின் உதவியுடன் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்
காயமடைந்த பயணிகள் அனைவரும் சிகிச்சைக்காக பங்கோர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.