ECONOMYMEDIA STATEMENT

எண்மரை பலி கொண்ட  விபத்து- குமாஸ்தாவின் மேல் முறையீட்டு  வழக்கில் கோபால் ஸ்ரீராம் ஆஜர்

புத்ராஜெயா, மே 5 – மாற்றியமைக்கப்பட்ட சைக்கிள்களில் பயணித்த எட்டு இளையோரின் மரணத்திற்கு காரணமாகும் வகையில் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதற்காக விதிக்கப்பட்ட சிறைத் தண்டனைக்கு எதிராக குமாஸ்தாவான சாம் கே டிங் எனும் பெண் செய்துள்ள மேல்முறையீட்டில் முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோஸ்ரீ கோபால் ஸ்ரீ ராம் ஆஜராகவுள்ளார்.

வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜித் சிங்கை தொடர்பு கொண்டபோதுஇந்த விஷயத்தை உறுதி செய்தார்.

டத்தோஸ்ரீ  ஸ்ரீராமை சாம் இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்த போது இந்த வழக்கில்  ஆஜராக அவர் ஒப்புக் கொண்டதாக ஹர்விந்தர்ஜித் சிங்  கூறினார். மேலும் சாமின் வழக்கறிஞர் பைசல் மொக்தாரும் வழக்கறிஞர் குழுவில்  இடம் பெறுவார் என்று கூறினார்.

இந்த வழக்கில் தங்களின் நியமனம் குறித்து மேல்முறையீட்டு நீதிமன்ற துணைப் பதிவாளருக்குத் தாம் தெரிவிக்கவிருப்பதாகவும்வழக்கிற்குத் தயாராவதற்கும் மேல்முறையீட்டு மனுவைத் தயாரிப்பதற்கும் ஏதுவாக மேல்முறையீட்டு ஆவணங்களை வழங்குமாறு கோரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

சாமின் மேல்முறையீட்டின் மீதான வழக்கு நிர்வாகம் துணைப் பதிவாளர் முகமட் கைரி ஹரோன் முன்னிலையில் வரும் மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேல்முறையீட்டு உயர்நீதிமன்றம் சாமுக்கு விதித்த ஆறு ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 6,000 வெள்ளி  அபராதத்திற்கு எதிராக முறையீடு செய்ய மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி அனுமதி வழங்கியது.


Pengarang :