கோலாலம்பூர், மே 10– தலைநகர், புக்கிட் ஜாலில் அரங்கில் ரமலான் சந்தை மற்றும் ஹரி ராயா விழாவில் வர்த்தக இடங்களை பெற்றுத் தருவதாக க் கூறி மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த 19 வயது இளைஞரை அவரின் குடும்பத்தினர் நெகிரி செம்பிலான், கிம்மாஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததைத் தொடர்ந்து செராஸ் மாவட்ட போலீசார் அவரை கைது செய்ததாக கோலாலம்பூர், வர்த்தக குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் ஏசிபி முகமது மஹிடிஷாம் இஷாக் கூறினார்.
வியாபார இட வாடகை தொடர்பில் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்ததன் மூலம் அவ்வாடவர் ஐந்து நபர்களிடம் 11,300 வெள்ளியை மோசடி செய்துள்ளதாக நம்பப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
புக்கிட் ஜாலில் ரமலான் சந்தை மற்றும் ஹரி ராயா விழா வியாபார இடங்களை வாடகைக்கு பெற்றுத் தருவதாக ஏமாற்றிய நபர் குறித்து கடந்த மார்ச் 30 முதல் ஏப்ரல் 14 வரை ஆறு புகார்களை தாங்கள் பெற்றதாக அவர் சொன்னார்.
முன்பணமாக வெ.1,500 முதல் வெ.2,700 வெள்ளி வரை கொடுக்கும் பட்சத்தில் வியாபார இடங்களைத் தாம் பெற்றுத் தருவதாக அந்த இளைஞர் வாக்குறுதியளித்துள்ளார். எனினும், புக்கிட் ஜாலில் பகுதியில் அத்தகைய வியாபார நடவடிக்கைகள் இடம் பெறாது என்ற அறிவிப்பைக் கண்டப் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை அந்த வணிகர்கள் உணர்ந்துள்ளனர் என்று முகமது மஹிடிஷாம் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420 வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய அவர், கைதான அந்த இளைஞர் விசாரணைக்காக இன்று வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்றார்