கோலாலம்பூர், மே 13- கடந்த வாரம் புக்கிட் பிந்தாங்கிலுள்ள ஹோட்டல் ஒன்றில் ஆடவர் படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் மூன்று ஆடவர்கள் மீது இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
எஸ்.பிரபா (வயது 49) என்ற அந்த ஆடவரை கொலை செய்ததாக டி.முனீஸ்வரன் (வயது 49), எஸ்.கதிர்வேலு (வயது 52) மற்றும் முகமது ஜல்பிஹார் அலி கான் கமால்டின் (வயது 48) ஆகிய மூவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி மாலை 6.05 மணிக்கும் 6.40 மணிக்கும் இடையே ஜாலான் பூலான் ஆப் ஜாலான் புக்கிட் பிந்தாங்கிலுள்ள கெப்பிட்டல் ஹோட்டலில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவு மற்றும் தண்டனைச் சட்டத்தின் 34 பிரிவின் கீழ் அவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
மாஜிஸ்திரேட் வோங் சாய் சியா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது குற்றச்சாட்டை புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அவர்கள் தலையை அசைத்தன. இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்டுள்ளதால் அவர்களிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்படவில்லை.
இரசாயன அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இந்த வழக்கை மாஜிஸ்திரேட் வரும் ஜூலை 13 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.